Sunday, May 08, 2005

கவிதைகள் எழுதும் அவள்

"அவள் கவிதைகள் எழுதுவாள்"
அம்மா சொல்லியபடி இருப்பாள்

இளமாலை நேரம்:
மேசைக்கு முன்
கதிரையில் உட்கார்ந்திருப்பேன்
நாற்காலி இரட்டைக் காலில் நிற்கும்
'தேத்தண்ணியும் மிக்ஸரும்
மினரல் வோற்றரும்' வந்தபடி இருக்கும்
சிலவேளை, ''அங்க வரக் கூடாதா''
கத்தி விட்டுப் போவாள்
கூட,
என்னை இழுக்கும்
நான் மட்டுமே இரசிக்கும் இசை,
மார்பு தளர
இமைகள் சொருக
தொடைகள் இளக,
உடல் முழுதும் ஆக்கிரமிக்கும்

வார்த்தைகளால் சுவாசிக்க முடியா உலகில்
சஞ்சரிப்பேன்
அந்நியமாவேன்
ஒளி வீச்சுள் நிற்பேன்
பலகீனமாய் இருப்பேன்
தனிமைப் பட்டிருப்பேன்

புத்தகங்களால் ஆன எனது கனவு லோகத்தில்
அம்மா இளமையுடன் இருந்தாள்.
~


00

Comments on "கவிதைகள் எழுதும் அவள்"

 

post a comment