Name:
Location: DIASborough, Ontario, Canada

Born in a small town in the Northern "Ceylon", having Tamil as mother tongue, moved to the capital Colombo in 1991; then to an Occupied Land (Called "Canada" [but itz ˈkænədə in this landerz tongue) in 1995; living in Diaspora ever since. With those place changes, there is still (and I think always) a small town gurl within me, who doesn't fit in the big city images of all sort.

Powered by Blogger

Monday, April 25, 2005

கதை 02

பிரார்த்தனை




இன்று: மரங்களற்ற, காற்றே வீசாத, நிலங்கள் விறைத்து நீற் கட்டியாய் ஆகிவிட்ட ஒரு பூமியிலிருந்து, தேவனே உம்மை விசுவாசிக்கிறேன். என்னுடைய தாத்தாவிற்கு, என் நேசத்திற்குரிய அம்மாவின் அப்பருக்கு நீர் அமைதியான மரணத்தைத் தருவியும். அதற்கு, அவரது பிள்ளைகள் திரும்பிப் போகும்வரை அவரை உயிரோடு வைத்திரும்.
இன்று, எனது மிகச் சிறிய, மெல்லிய எலும்புக் கைகளால் உமக்கு ஏற்றுகிறேன் இந்த (மெழுகு) த்திரிகளை. என்னுடைய தாத்தா, பாண்டியங்குளத்தில் எனக்குள் எப்போதும் வெயிலாய் நினைவிருக்கும், நிழலற்ற முற்றத்து மாமா வீட்டில் இருக்கிறார். ஓ! என்னுடைய தாத்தா. பாண்டியங்குளம் இலங்கைப் படத்தில் எந்தப் பக்கத்தில் என்பதை நான் அறியேன். ஆனால் அங்குதான் தாத்தா இருக்கிறார். தற்சமயம், அங்கு பூச்சியும் பாம்பும் பெருகும் மாரி காலம். அவரைப் பற்றி சொன்ன கதைகளில் 'ஆறடி தாண்டிய உயரத்தில் கம்பீர ஆண்மகனாய்' இருக்கிற (தாத்தா போல ஒரு மாமாவும் இல்லை) எனது தாத்தாவை, தயவு செய்து நீர் காத்தருளும்.
அவரை அறியாத எனது தம்பிகள் அவரைப் பார்க்கவேண்டும். மூத்திரம் மணக்கும் அவரது பாயை நெருங்கி, அருகிருந்து அவர் கிக்கிளிக்கிண்ட சிரித்து, அவரோடு விளையாட வேண்டும். கையாலாகாத கனவோடு இது நிறைவேறுகையில் பூரிப்பில் மினுங்கும் அவர் முகம் நினைத்து அழுந்துகிறேன். கடந்த கோடை காலம், அவரிடம் நான் விடைபெறும்போது முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஒரு குழந்தையைப் போல, நினைத்ததை அடைய முடியாத ஒரு குழந்தையைப் போல... தேவனே! அவருக்கு நீர் அமைதியைத் தருவியும். அவருடைய, மிகச் சிறிய, அவரது குழந்தைகளைப் பெற்றதைத் தவிர வேறெதையும் பெறாத, மெல்லிய அந்த மனைவியையும் அமைதியாய் வைத்திரும்.
இன்னமும் திரும்பி வராத பிள்ளைகளைப் பின்னிய சிறிய கிழவியின் உள்ளிடுங்கிய கண்களிலிருந்து வழியும் அந்த மாலைப் பொழுதுகளின் நீர் ஐயோ அது வற்றிவிடக் கூடாதா. பாக்கை பாக்குரலில் போட்டு இடித்தபடி தாத்தாவை தூற்றியபடி அவ கொட்டுகிற ஒப்பாரி இன்னமும் பேய் வீட்டில் உலவுவதுபோல மனமெல்லாம் விரவுகிறது. நான் பாவி. எனது அனுமதியற்று, என் விருப்பத்திற்கப்பால் இங்கே ஆரம்பித்துவிட்ட இன்னொரு வாழ்க்கையை விட்டு, சாவு மட்டும் ஏனும் அங்கே அவர்களோடு இருக்க முடியாதுபோன பாவி. துயர் நிறைந்த கனவுகள் காணும் அம்மாவைத் தொற்றிய குற்ற உணர்ச்சியோடு, இந்த இரவில் உமக்கொரு மெழுகுதிரியை மட்டும் கொழுத்திவிட்டு, நானிங்கு எரிகிறேன். இந்த இரவு, தாத்தாவின் கைகளைப் பிடித்தபடி, அவரது முதுமையில், அவருக்கு அருகில் இருந்து -அவருக்காக- “நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்” என சொல்ல முடியாத குற்ற உணர்ச்சி கொல்கிறது.
என்னிடமோ மதம் இல்லை. அவ்வாறெனில், இந்த குற்ற உணர்ச்சியை நான் எப்படிக் கரைப்பது. எனது கோயில்கள் கூட்டமாய் இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்ப்பதும் போவதும்... நான் உவ்விடமே உம்மைப் பார்த்து குந்தி இருக்கிறேன். பழக்கயீனத்தில், எனது முழங்கால்கள் வலிக்கவில்லை. உம்மை முழுமனதுடன்தான் விசுவாசிக்கிறேன். தம் பட்டுக் கைகளை ஒன்றுமில்லை என விரித்துக் காட்டும் குழந்தையைப்போல; தருவதற்கு தன்னிடம் எதுவுமேயில்லாத ஒரு குழந்தையைப் போல... என் கைளை உம்முன் விரிக்கிறேன். நம்புவதற்கு மதத்தைத் தராத குடும்பத்திலிருந்து உம்மிடம் மன்றாடுகிறேன். நீர் நிறைவேறாத எம் கனவுகளை விட்டுவிடும். ஆனால் தேவதைகளையும் அதிர்ஸ்டங்களையும் எமக்குத் தாரும்.
அப்பாவுக்கு, அந்த அதிர்ஷ்ட இலாபச் சீட்டை விழச் செய்யும். மறுபடியும் அம்மாவின் ஊருக்குப் போகலாம். தாத்தாவோடு குந்தி இருந்து, மீசை வைத்திலிங்கத்தைப் பற்றி, அவரை இவர் கொன்றதான கதைகளைப் பற்றி, பறையலாம். பழி குறித்த எந்த பயமும் இன்றி, மேலே காட்டி, உண்மை அவனுக்குத் தெரியுந்தானே...” என்கிற கிழவனை, அவருடைய கரம் பற்றி நாம் நடந்த கதைகளை விசனமற்று, குற்ற உணர்ச்சியற்று எனது குழந்தைகளுக்குச் சொல்லலாம். எல்லாம் வல்லவர் நீர், ஆதலால் அற்புதங்களைச் செய்யும் தேவனே.
உயிர் கொல்லும் நோய்களை நீர் குணமாக்கிறீர். உம்மால், கால் நடக்க முடியாதவர்கள் எல்லாம் எழுந்து நடக்கிறார்கள். கதவு தட்டி வரும் சாட்சிகளோ, சகல துன்பங்களினதும் நிவாரணி நீர் என்கிறார்கள்! கேள்விகளற்று உம்மை நம்பினால் புனித பரதீஸில் அனுமதி இலவசம் என்கிறார்கள். ஆதலால், எயிட்ஸ், புற்றுநோய் என எடுத்தியம்பி, உம்முடைய அற்புதங்களை நான் சந்தேகிக்கேன் தேவனே. (தவிர, எயிட்ஸ் நோயாளர்கள் எல்லோருமே ஒழுக்கம் தவறியவர்கள் என நீரும் மாயை கொண்டிருக்கலாம், உம் தவறில்லை.) - ஆனால்
நான் மிகவும் ஒழுக்கமானவள் தேவனே. புகைத்தல், மது (திராட்சை ரசம்கூட) மற்றும் நீர் ஒத்துக்கொள்ளாத மைதுனங்களைக் கைவிட்டேன். உம்முடைய இராச்சியத்தின் சகல எதிர்பார்ப்புகளையும் கடைப்பிடிக்கிறேன். நான் உம்மை தவிர்ந்த உருவங்களையும் விக்கிரங்களையும் துதிப்பதும் விட்டேன். இதற்குப் பிறகும் என்ன செய்து உம்மை ஈர்ப்பது. நான் ஒரு பரம்பரை விசுவாசி இல்லையே. என் அறியாமையின் முன் என்னை மன்னியும் பிதாவே. “வெளிச்சத்தைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கான இரட்சிப்பு” அது எனக்கில்லையா. இன்னமும் ஏன் ஆன்மா இருண்டிருக்கிறது?
நாங்கள் போயிருந்த மாதம் தாத்தா குழம்பி இருந்தார். அவருக்கு எண்பத்தைந்து வயதாகிவிட்டது. அம்மாவின் சீதனக் காணிகளை அவளது பெயருக்கே எழுதும்படி இரவுகளில் தூக்கத்தில் எ(ழு)ம்பிக் கத்தினார். அந்தக் காணிகளை நீரே எடுத்துக் கொள்ளும். எங்கோ வெகு தொலைவில் வன்னிக் காடுகளுள் இருக்கக் கூடிய அவற்றை நீரே வைத்துக் கொள்ளும். குளிர் பிரதேசத்து காற்றோ, உயிரைத் தின்னும் விறைப்போ அற்ற அங்கு, வெயில் கறுத்த, மிகவும் உபச்சாரம் மிக்க அந்த மக்களோடு போய் ஷேபமாய் நீர் இரும். அதற்கீடாய், என்னைக் கவனியும்.
எட்டொன்பது வயதில் நானும் அக்காவும் எம் வீட்டுப் பின் காணியில் இப்போதுதான் ஒடுகிறோம். அம்மம்மா வீடு எனக்கு; எங்கட வீடு அவளுக்கு. உளுந்து விதைச்சிருக்கு. சந்திரன்மாமா வந்து போகிறார். இயக்கத்து மாமாக்கள் ஒவ்வொருவராய் திரும்பாது போகிறார்கள்; சில்வா மாமாவை மறக்கவே முடியவில்லை.
தேவனே இன்றோ பின் காணி வரண்டிருக்கிறது. காணிக்குள் பனை வடலிகள் முளைக்கின்றன. அம்மாவிற்கு முந்திய காலத்திலேயே பெரிதாக இருந்திருக்கக்கூடிய சிவத்தப் பூ மரம் வெட்டப்பட்டுவிட்டது. பக்கத்து வீட்டுக் காரர்கள் வேலியை சில அடி தள்ளி முன் நட்டுவிட்டார்கள். நாங்கள் வரவே மாட்டோம் என்ற அவர்கள் நம்பிக்கையை மீறி வரத்தான் செய்தோம். இன்னமும் 'ஹோலிங் அப்பா ஹோலிங் அப்பா' என்றுவிட்டு தேவா மாமா மரங்களிடை இருந்து வெளிப்படுகிறார். பிறகு, அவரது உதடுகள் பாடும் அந்தப் பாடல்: ''...வேப்பமர நிழலிலே... வைத்தியரோ பாயிலே காவல் காத்த ஐயனாரும் களவு போனாரே...''
மதங்கள் தெரியாது நாங்கள் வளர்ந்த வீடு. அது உம்மை அச்சுறுத்திற்றெனின் மன்னியும் பிதாவே. உண்மையான மனிதர்கள் வாழ்ந்த தடங்கள் மட்டுமே தங்கிய வீடு. எனக்கு, செருப்புப் போடாமல் பாதம் ரெண்டும் வெடிப்பு; இரவெல்லாம் சொறி. வீடோ எந்தக் கோபத்தையும் பாராட்டாமல் மீண்டும் தாழ்வுணர்ச்சிகள் நிறைந்த தனது குழந்தையை தாலாட்டிற்று. அம்மாவின் ஏணைப் பாடல்: "உள்ளிப் பொதியோடு வந்தீரோ தம்பி, உள்ளி மலை நாடு கண்டீரோ தம்பி” வீடெங்கும் நிறைந்திற்று.
எது துயரம்? 'பதினோரு' பிள்ளை பெற்று, இரண்டை வளர்க்கவும் செய்த தாத்தா வாசற்படியில் ஈ மொய்க்க குந்தி இருந்தார். அந்தப் பெரிய வீட்டில் அவர்கள் மட்டும் தனியே. பட அறை சன்னல் திறந்து, தெரிந்த வெளியில் உதட்டைக் கடித்தபடி அழுதேன். என் குழந்தைக் கால்களால் நான் நடந்து திரிந்த மண். ஆயுதங்கள் நிறைந்திருந்த அந்த அறை...
இந்த வேதனைகளை தேவனே நான் யாரிடம் சொல்வது. நட்பற்ற முகங்களுக்குள் புதைந்துகொண்டிருக்கும் எமது மாணவர் பிராயத்திடமா. இந் நாட்டோடு ஒட்டமுடியாது எங்களது எதிர்காலத்திற்காக, எல்லையற்ற -வீடு திரும்பாத- குற்ற உணர்ச்சியோடு, வருடங்களூடே விரக்தியை நகர்த்திக் கொண்டிருக்கும் எனது பிதாவிடமா. அல்லது கொஞ்சம் கொஞ்சமாய் புதிய கலாச்சாரத்துள் கலந்து கொள்ளும் முனைப்பில் விலகிக் கொண்டிருக்கும் எனது தம்பிகளிடமா.
நானும் அக்காவும், எனது தாத்தாவின், அம்மாவின், அப்பப்பாவின் அழகிய பூமியில் தேவதைகளாய் இருந்திருப்போம். எங்களது மச்சான்கள் நிறைந்த தன்னம்பிக்கை நிறைந்து, சாவிலும்கூட வாழ்ந்துதான் இருப்போம்.
இங்கே நான் பிச்சைக்கார நாட்டின் பிரஜை என எனது விஞ்ஞான ஆசிரியையால் ஞாபகப் படுத்தப் படுகிறேன். தேவனே நான் ஒரு மிருகத்தைப்போல -நாகரிகமற்றவள் என்பதாய்- பார்க்கப் படுகிறேன், தானாய் இருக்க முடியாது போய்விட்ட ஒரு வீட்டு மிருகத்தைப்போல... நான் ஒரு காட்டுமிராண்டித்தனமான கலாச்சாரவாதி என சொல்லப்படுகிறேன். ஈவிரக்கமற்ற தீவிரவாத இனமாய் அணுகப் படுகிறேன். என்னை நிலைநிறுத்த, எனக்காய் வாதாட, இங்கு ஏதொன்றும் இல்லையே.
இந்த குளிர் நிறைந்த நாட்டில், குளிர் நிறைந்த மனிதர்களுள் எம் எந்த உருவமும் சரியாயில்லை. எனது இனத் தலைமுடிக்கு செம்பட்டை, சிவப்பு, மண் நிறம் என்பவில் இன்னமும் சரியாய் நிறம் வாய்க்கவில்லை. எந்த திரவத்தில் முடி அழகாய் நீளமாய் நிற்கும்? எந்த கட்டியில் முகம் பளபளப்பாய்ப் பருவற்று மினுங்கும்? எந்த மேற்பூச்சு கறுப்பை வெள்ளையாக்கும்? தேவனே நீர் சொல்லுகிறீர், உம்முடைய குழந்தைகள் சகலருமே உம்முன் சமமென்று. வாரும், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தாங்கிய சிலுவையிலிருந்து வந்து, வாழ்ந்துபாரும் ஒருக்கால். பின் சொல்லும்: வறுமை-செழிப்பு, கறுப்பு-வெள்ளை, கட்டையாய் நெட்டையாய் ஆணெனப் பெண்ணென வேறுபாடுகள் உடன் தானே எமை நீர் படைத்தீர்.
இந்த வேறுபாடுகள் எல்லாம் மாறும் எனவே நானும் விரும்புகிறேன். ஆனால் தேவனே, இங்கே, இந்த எனது காலத்தில், நான் அச்சத்தால் தினம் சாகிறேன். எப்போது எந்த சிறுவன் என்னைத் துப்பாக்கியால் சுடுவான் என்றும், எப்போது எனது சிறுமி உடல் எலும்பாய் கண்டு பிடிக்கப்படும் என்றும், எப்போது நான் தொடர்மாடியின் உச்சத்திலிருந்து விழுவேன் என்றும், எனக்கு சொல்ல முடியாதிருக்கிறது. நான் ஒரு குழந்தையை ஈன்று, அதை, இந்த பூமியில் இந்த வன்முறையுள், மனித உணர்ச்சிகளே மரத்த சூழலில், எப்படி வளர்ப்பேன் என்றும் எனக்குத் தெரியவில்லை. இரவுகளில், தங்கை வீடு வராத இரவுகளில் என் மனமோ பெண்டாளர்களையும், சடுதியில் எவனுக்கோ விறைத்துவிட்ட குறியையும் எண்ணி எண்ணி துயருறுதல்; எனது தம்பிகளில் சிறுவத்தை துஸ்பிரயோகம் செய்யக் கூடிய பெரியவன்களை நினைத்து பயமுறுதல் (அவர்கள் ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களில் எவராகவும் கூடும்) இவையே வழக்கமாகி விட்டது. தேவனே நீர் என்னைத் தூற்றும், என் சுயநலத்தை விடுமாறு கூற்றும்.
முடியவில்லை தேவனே. என்னுடைய குரலை எழுப்ப முடியாத சூழலில், எல்லோருடையதும்போல, செழுமை மிகுந்த எனது வரலாற்றைச் சொல்ல உந்தப் படுகிறேன். எனது விஞ்ஞான ஆசிரியைக்கு. அற்பமென பார்த்து அகலும் சக மாணவர்களுக்கு. வேறு இனத்தவரைப்போல இருக்க முனையும் எனது சகோதாரர்களுக்கு. காற்சட்டையை இழுத்து இடுப்பிற்குக் கீழே விட்டு, இழுத்து இழுத்து கறுப்பினத்தவரைப் போல நடந்து, அவர்களோடு இணைய விரும்பும் எனது இனத்தின் பேரழகு மிகுந்த தம்பிக்கு, அவனுடைய நண்பர்களுக்கு. தேவனே என்னுடைய வரலாற்றை -எனக்கே சொல்லப்படாத ஒரு மெய்க் கதையை- எப்படி நான் சொல்லுவேன்?
நான் யுத்தத்தால் பிடுங்கப்பட்டேன். இன்று எனக்குரிய நாடு எதென்று எனக்குத் தெரியவில்லை. என் வேர்களிலிருந்து பிடுங்கப்பட்டதை என்னால் ஒருநாளும் கடந்து போக முடியவில்லை.
நகரத்தில் நான் ஒரு விலகிக் கொண்ட சீவனாய் இருக்கிறேன். புகழ், சுயமோகம் இவற்றை விரும்பாதவளாக இருக்க முனைகிறேன். போலியான நன்னடத்தையும் தன்னடக்கமும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் தேவனே அகங்காரமும் திமிரும், வெறுப்பும் காயமும் என்னை துக்கத்துக்குரியவளாக்குகின்றன. இந்த அசிங்கமான உலகத்தில் எனது ஆன்மா ஏன் இன்னமும் அசைந்துகொண்டிருக்கிறதோ... வாழ்க்கையின் மூலாதாரமென உலகமே நம்புகிற ஒரு வாரிசை எனது காதலனிற்கு/துணைவனிற்கு பெற்றுக் கொடுக்க விரும்பாத நான், ஏன் தேவனே இன்னமும் பாவிகளில் ஒருத்தியாய் கலந்து கொண்டிருக்கிறேன். தேவனே நீரும் நான் ஒரு கன்னி என்பதால் மேரிக்கு தந்ததுபோல ஒரு குழந்தையை எனக்கும் தாராதீர். அவனது திருடனாய் உருமாற்றம் ஒரு சொடுக்கில் நிகழ்ந்திரும், அங்ஙனம் என்னை நீர் மேலும் மேலும் பாவியாக்காதீர்.
ஜோதி ஜ்வாலித்து எரிய, அதில் பெருங் கூட்டமாய் கலக்கும் ஜனங்கள். நானும் கலந்து, உமக்காய் மஞ்சள் நிற மெழுகுதிரிகளை கொளுத்துகிறேன்.
எனது குழந்தைகளைக் காப்பாற்றும். மனஉளைச்சலுள் அழிந்துவிடாது, நெடுங் காலம் துடிப்பும் இலட்சியங்களும் கொண்டிருந்த எனது தந்தையாரைக் காப்பாற்றும். இந்த தொலைக்காட்சி வலையுள் இருந்தும், வியாபாரிகளின் பிரச்சாரங்களிலிருந்தும், வேகமாய் இராட்சசன்களைப்போல உருமாறிவிட்ட வாகனங்களிலிருந்தும் -அப்பாவைப்போல அழகும் நேர்மையும் மிகுந்த- எனது குழந்தைகளைக் காப்பாற்றும். தேவனே என் அம்மாவிற்காய் அவரது அப்பாவிற்கு நீர் அமைதியைத் தாரும். அதற்கு அவரை உயிருடன் வைத்திரும்.
தேவனே... உம் மதத் தளம் தடைசெய்ததுபோல எனது தம்பிகள் ஓரினச் சேர்க்கையாளர்களாய் ஆவதில் இருக்காது எனக்கு வருத்தம். அவர்கள் எமது குடும்பத்தின் அடுத்த தலைமுறையை செய்யும் இயந்திரங்களாக வேண்டாம், அவர்கள் பெண்களை வசியம் செய்யும் வஞ்சகர்களாக, பெண்டாளர்களாக இல்லாமல் இருக்கட்டும். ஓரினச்சேர்க்கையாளர்கள்போல மென்மையானவர்களாய், அவர்கள் அன்பு மிகுந்த இனிய மனிதர்களாய் இருக்கட்டும் தேவனே.
இதற்காகவெல்லாம், உம்மிடம் தருவதற்காய், இன்றிரவு தேவனே, என்னிடம் எதுவும் இல்லை. என் கருவறையில் பலியிட ஒரு கருவும் இல்லை. நான் எல்லாவற்றையும் தியாகம் செய்கிறேன்; தியாகத்தின் பெருமை கூட வேண்டாம். வன்னியில், தொப்புள் அடியில் சேர்ட்டின் இரு நுனிகளையும் முடிப்புப் போட்டுவிட்டு, பட்டின்களைப் பூட்டாமல், தன் தாத்தாவைப்போல ஒரு நடை நடந்து கொண்டிருக்கும் “கந்தனை” அவனது அரிசிப் பற்களின் சிரிப்பை, அவன்போல நானும் அக்காவும் நடந்த தெருக்களை... தேவனே என்னைப் பார்க்க விடும். வீட்டு வேலிகளிற்கு இப்போது மறைப்பும் இல்லை. நான் அங்கு நின்ற ஆடி ஆவணியில் மழை உம் இல்லை. படயறை சன்னலில் ஏறி நின்று, அக்காவும் நானும் பாடிய மழையே மழையே போ! போ! போ! வெயிலே வெயிலே வா! வா! வா!” வை மாற்றிப் பாடியும் இல்லை.
அன்று: மழை ஏன் வரவில்லை தேவனே. தன்ர காணிக்குள்ள வந்திற்றென்பதால் மோகனண்ணா நஞ்சு வைத்துக் கொன்ற "வள்ளி” மான்குட்டிக்குப் பிறகு வந்த இன்னொரு மான் குட்டி, விறாந்தைக்குள்ள நின்று இரண்டு பக்க சுவரிலையும் ஓடி முட்டி முட்டி தன்ர கட்ட அவிட்டு விடச்சொல்லி செத்திச்சே... அதுபோல, மரணத்தை ஒப்பான வெறி பிடித்த மகிழ்வுடன் நான் கோடிப்புறம், முற்றம், கிணத்தடி எல்லாம் ஓடி ஓடி உயிர் கொடுத்திருப்பேனே, ஏன் மழை வரவில்லை? அதால், தண்ணியற்று விளைச்சல் குறைஞ்ச வயலெல்லாம் செழிச்சிருக்கும். புல்லுக்கும் நெல்லுக்கும் வித்தியாசம் தெரியாத நானும் பொழுது வெளித்து நூரும் கிறக்கத்தில் என் காதலை நினைத்தபடி படுத்திருப்பேன் ஆனால் அங்கு மழை இல்லை...
இங்கோ மழை பெய்யும் நாளெல்லாம் தனிமை. நகரத்தில் நொடிக்கொருதரம் அம்புலன்ஸ்களின் அலறுதல். அதன் ஒலி காற்றில் கலையும்வரை, ஒரு சிறுவனோ, கனவு நிரம்பிய பதின் பருவக்காரியோ, வீடு திரும்பாத அகதிக் கிழவனோ, ஒரு நொடிதான், அதில் முடிந்துபோன ஒரு வாழ்க்கையை தொடர்கிறது மனம். அன்பும் காதலும் அனுபவிக்கப்படாத இந்த வேதனைகளிலிருந்து என்னை விடுவியும். இந்த அச்சங்களிலிருந்து. இந்த நிராதரவுகளிலிருந்து. இந்தக் கண்களிலிருந்து விடுவியும்.
அதற்கு, உம்முடைய ராச்சியத்தை இன்பம் மட்டுமே பொங்கும் அந்த பரதீஸை நீர் வெகு சீக்கிரத்தில் உண்டு பண்ணும்.
ஆமென்.
~



(டிசம்பர்/2002,
இறுதித் திருத்தம் மே/2003)

Monday, April 18, 2005

கிழிகிறதடி என் நாட்கள்

1.
கிழிகிறதடி என் நாட்கள்
மௌனப் புறாக்களாய்

உனக்கு தெரியுமோ
நான் யாரையும்
இப்போ
எதிர்ப்பதில்லை
முரண்பட்டு விலகியவர்களை
மனிதர்களென சேர்த்துக்கொண்டேன்
உடன்பட்டு வந்தவர்களோ
மனிதன்களாகவே
இனியும் இருப்போம்
என்பர்

கிழிகிறதடி என் நாட்கள்

என் மோனம் இழந்தேன்
இனி
நளினம் அழகு
இரண்டையும் இழப்பேன்
இறந்ததும் நிகழ்வதும்
ஒன்றுபோல
காலங்கள்.

நெஞ்சு மையத்துள் வெறுமை


ஏதும் செய்ததாய்
அன்றில்
எதுவும் செய்வதாய்
நினைவில் இல்லை

செய்யப்போவதாய்
எனக்குள் எழுகிறது
சாதாரணங்களின்
ஜனரஞ்சகக் கனவு

அதோடு
கிழிகிறதடி என் நாட்கள்.




2.
நான்
எதைச் சாதித்தேன்
எதைச் சாதிப்பேன?

கால்வைத்த மனிதனை
எதிர்க்கத் திராணியற்று
கலைகின்றன
மௌனப் புறாக்கள்

பாரதியின் பாடலில்
அகமகிழ்ந்து குந்த
நான் என்ன பராசக்தியா?

கலைகின்றன புறாக்கள்
கழிகிறதடி என் காலங்கள்




3.
என் உடல் செயற்படாமற்போய்
சில வருடங்கள் ஆயிற்று

அந்த சிலவற்றுள்
சிதைந்த என் கனவு
ஏக்கம்

இப்போதும்
கனவுகள் மீண்டும் வராத என்கின்ற
ஏக்கம்

மீண்டு
மீண்டும் வா

4
எவனதும் பாதிப்பற்று
எழுதும் ஆசை

எவளைக்கேட்டாலும்
பாரதி என்கிறாள்
சரி அப்புறம் என்றால்
இன்னொரு பாரதி
யுகக்கவியாய் முளைத்தும் விடுகிறான்

எவனதும் பாதிப்பற்று
எழுதும் ஆசை
வேராய் இருக்கிறது
என்னுள்

எனக்குத் தெரிந்து
எவனும் அப்படி எழுதிக் கிழித்ததாய்
இல்லை

இங்கு எவனைப்பற்றியும்
எவனுக்கும் கவலையில்லை.

அவனவன் கவலையெல்லாம்
அவள்களின் பாதிப்புக்கள்
தாங்களாக வேண்டும்
அதுவே
~




1999 நவம்பர் உயிர்நிழல் 06

Sunday, April 10, 2005

கதை 01

சோகித்த பொழுதுகளின் நிமித்தம்



''எங்க ரீயூசன் போய்ட்டே வாறியள்'' அம்மனிதர் கேட்டபோது, நீ, ''ஓம்'' என்ற
தலையசைத்தலோடு அந்த வீடியோக்கடையில் போடப்பட்டிருந்த 'நீயூ அறைவல்ஸ்' ஐ பார்க்க ஆரம்பித்திருந்தாய். அந்த மனிதரின் சுருங்கிய முகம் இன்னும் சுருங்கியபோது, ஒரு அவஸ்தை ஒழிப்பை காண நேர்ந்ததும் துடித்துப்போகிறேன் நான்.
உன் அந்தரப்படலும் கண்ணில் தெரிவித்த அப்பட்ட அந்நியமும் என்னை
நொறுங்கவைத்தது சகி. அவரின் சில மின்னல் அவஸ்தையில், அந்த மனிதர் என் முன்னால் இன்னும் சிறுத்துப்போய் நரைத்துப்போன அந்த விநாடி, எனக்குள் ஓராயிரம் பல்ப் நூர்வுகள் ஒரே சமயத்தில் நிகழ்ந்துவிட்ட சோகம்.
எனது கண்கள் நான் அனுபவித்து அழும் ஒருபொழுதுக்காய் கலங்கிவிட நான் என்னுடனான உனது 'வழமையான' நாட்களில் ஒரு நாளை நினைத்துப் பார்க்கிறேன்.
நீ ஷோபாவில் படுத்துக் கிடந்தவாறே விட்டத்தை வெறித்தபடியிருந்தாய். நான் கேட்டால் ஏதாவது ஒரு தத்துவம் உன் வாயிலிருந்து உதிருமென்றபடி ''என்ன சோகமாய் போஸ் குடுக்கிறாப்ல?'' எனக்கேட்டுவிட்டு நான் நகர்ந்துவிட்டேன் உனது விளக்கங்களை கேட்கும் பொறுமையின்றி.
நான் அப்பால் போய் எதுவும் செய்யாவிட்டாலும் நீயாய் சொல்லமட்டும் அந்த
மாபாவத்தை செய்யாது எனது நேரத்தை பாதுகாப்பதில் குறியாக நகர்வேன்.
நீ வந்து என்னோடு கதைத்தபோது, நீ நீண்டநேரமாக எனக்காக காத்திருந்து ஏமாந்து பிறகு வேறு வழியின்றி 'வலிய' என்னோடு கதைப்பதாய் எனக்குள்
மகிழ்ச்சி. உனக்கு எந்த மகிழ்ச்சியையும் தராதுவிடுவதில் என்ன சந்தோஸமோ...
எம் சந்திப்பின் பின் நான் உன்னுள் உணர்ந்த, உனக்குள் புதைந்திருந்த கனம் என்னுள் சலித்தது. கனடாவில் நீ சப்பாத்துக் கால் பதித்த மூன்று வருடங்கள். இன்னுமே முடிவுறாத உன் வலிகள் எத்தனை எச்சமாய் உனக்குள்?
உனக்குள் புதைந்திருந்த கனம் என்னுள் சலித்தது.
நான் "சரி சொல்லித் துலை'' பாவனையோடு உன்னை பார்த்தேன்.
நீ எலிவேற்றரில் கண்ட 'நம்மினத்தவர்' 'முதியவர்' பின்னிணைப்புகளோடு
ஆரம்பித்தாய். நான் ஒரு கதைகேட்கும் தொனியில் சோர, நீ, ''நான் இறங்கிறன்
அந்தயாள்...'' மனதுக்கு பிடிக்காத காட்சி நினைவில் உன் உதடு நெளிய, அருவருப்பா அசிங்கமா தெரியாத் தொனியில் நீ சொல்கிறாய்.
நான் ஒரு மூன்றாம் வகுப்பு பிள்ளைபோல, பால் சம்மந்தப்பட்ட எதுவும்
அறியா பருவக்காரியின் பாசாங்குபோல, "கி கிஸ்ட் யூ... ஏஏ......'' இன்னும் ஒரு
பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ணை 'எங்கெங்கு தொட்டு..." விளக்கம் கேட்கும்
அற்பப் பதராகி மாய்ன இப்போ என்னில் எரிச்சல் வருகிறது.
என் கண் எதிரே இருக்கும் முதிய மனிதர்தான் நீ குறிப்பிட்ட 'நம்மவர்' எனப்
புரிகையிற்தான் உன் வலி என்னால் உணரப்படுகிறதே... இந்த மனிதர் உனக்கோ அல்லது எனக்கோ புதியவரல்ல. இவரோடு முதல் உரையாடத் தொடங்கியது உனது நட்புக் கரங்களும் அந்த ஓயாத வாயும்தான்.
வயது வித்யாசமற்ற அவருடனான உனது நட்பை என்னால் உன் சில
உரையாடல்களில், நாமிருவரும் நடந்து வருகையில் அவர் விசாரித்தல்களில்
உணரப்பட்டது.
நீ பலநாள் மன உளைச்சலில் உழன்று பாடசாலைக்கு ஏன் கடைகளுக்குக்கூட இறங்காத அந்த நாட்களின் பின் ஒருநாள் உன்னைக்கண்ட அவர், ''என்ன பிள்ள
கனநாளாக் காணேல்ல... சுகமாயிருக்கிறிங்களா.. எங்க படிக்கிறிங்க..'' இத்யாதி கேள்வி கேட்டு நீ மறுக்க மறுக்க ஒரு சாக்லேட் பைக்கற்றும் வாங்கித் தந்ததை நீ உன் வீட்டினரோடும் என்னோடும் பகிர, நான் என் மன 'நல்ல மனிதர்' லிஸ்ற்றில் அவரையும் சேர்த்துக்கொண்டதும் ஏனோ தோழி எனக்கு மிக அருகில் இருக்கும் இந்த மனிதர் பக்கம் பார்வை திருப்பவே இப்போ அருவருப்பாக இருக்கிறது. மன்னித்து விடு. உன் வலி எனக்குப் புரிகிறது.
நீயும் ஒன்றும் யதார்த்த நியத்திற்கு முரணென்று இல்லை. முதியவர், துணையிழந்தவர், வீடியோவில் மட்டும் பொழுது போகும். நான்கு சுவர்கட்குள்
அடக்கப்படும் 'பலவற்றுள்' சினிமா ஏற்றும் பாலியல் கிளுகிளுப்பு இப்படி எப்பவாச்சும், எலிவேற்றரில் சடுதியாய் தீர்த்தால்த்தான் என்று (வீடியோக் கடை காண் நட்புத்தானே!?)
வக்கிரம் அந்த வக்கரிப்பு சிறு பெண்ணை அவளின் விருப்புதலின்றி நெருக்கும் மனித மிருகம்..... ஐயோ அது உனக்குள் எத்தனை காயங்களை ஏற்படுத்தியிருக்கும்?
நீ உன்னைக் கிழித்து எழுப்பும் கேள்விகளை நான் எப்படி நிராகரிக்க முடியும்?
நாங்கள் அந்த இடத்தைவிட்டு வெளியேறியபின்னொருநாள் நீ சொன்னாய்.
''மீண்டும் அவரைச் சந்தித்தபோது கோபம் வரவில்லை நான் பேசவும்
விரும்பவில்லை. நீஅவர் உணராத என் காயங்களை அவர்நீ உணர்ந்தே ஆக வேண்டும்.
அப்பாவோடு ஏன் பதட்டம்? பயப்படாதே.. நான் உன்னைக் காட்டிக்
கொடுக்கப் போவதில்லை. (அதனால் என்ன வித்யாசம் வந்துவிடப் போகிறது?)
இனிமேல் உன்னிடம் காயப்படும் சிறுசுகளுக்காக. தயவு செய்து மீண்டுமொருமுறை உன்னைக் காட்டாதே (இப்பொழுதும் நான் கவலைகொள்கிறேன் உன் தனிமைபற்றியும்
காமம் பற்றியும்.)''
நான் மௌனமாக இறந்த காலங்களில் நடக்கிறேன்.
அசட்டுப் பெண்களாக பாடசாலைவிட்டு தர்சினி அக்காவீட்டு 'விளாங்காய்' மற்றும் நாவற் பழக்கனவுகளோடு வளர்ந்த நாங்கள். எனக்குள் சிலிர்ப்பு.
நீ, ''இவங்கள் இப்படித்தானா?'' என உதடு இறுக்கி கண்கள் வலிக்க
கேட்கையில், "எல்லாரும் அப்பிடியெண்டில்ல ...சிலபேர் தெரியாதே" பதில்
தந்து உன்னை பேசவிடாதிருந்திருக்கிறேன் அல்லது ஏமாற்றியிருக்கிறேன்.
நீ, உனது குடும்பம், உனது இருண்ட குழந்தைப் பருவம் தோழி, நான்
உணர்கிறேன். இரும்பும் நெருப்பும் மிகுந்த உன் விழிகளின் அழகில் முழுதுமாய்
மயங்கிக்கொள்ள முடியாமை உனது முழிக்கறுப்பின் காரணமோ?
உனது இறந்தகாலங்களை நீ நீட்டிப்போடும்போது 'நிகழ் காலத்தில் வாழு' என்
தத்துவ விளக்கங்கள் இப்போது எனக்கே பகட்டாய்ப்படுகிறது.
றேகா.... நீ வஸந்தகாலத்தின் மாலைப் பொழுதொன்றில் கேட்ட கேள்வி என்னுள்
இன்னும் ஈரலிப்பாய்த்தான் இருகிறது.

''பெண், பெண் பிறப்பு, பெண் வாழ்க்கை, பெண் உடை, பெண் அகராதிகளிடையே செத்து, இங்கும் அதே பழமையை மாற்றிப்போட்ட புதுமையில் அல்லாடும் நான். நான் எங்கே வாழ்வது?'' ஒரு திடீர் பிரசவமான கவிதைபோல் இருக்கிறது உன் வரிகள்.

''எனது வாழ்க்கையுள் நுழைந்த எவளுமே எனக்கு வாழக்கற்றுத் தரவில்லை.
எவனுமே வாழவிடவில்லை. அன்று என் அன்னையை வதைத்தவர் கண்களிற்படும் போதெல்லாம் நான் எத்திக்கும் தப்பாது சிதறிப்போகிறேன்.
நான் நானாக வாழ எவரும் விடவில்லை. வாழ முற்படுகையில் நிறம், இனம், பால் எல்லாமே தடுக்கும் அவலம். அடக்குதலை எதிர்த்தெதிர்தே நான் பலவீனமாகி விட்டேன். என்னால் தொடர்ந்து ஒரு சராசரி மாணவியாக 'மனமொப்பி' நகரமுடியவில்லை.
கனடாவில் ''*3Ws ஐ நம்பக் கூடாது'' சொல்லும் ஆசிரியர் மீதில் எனக்கு அபிமானம் இல்லை. வெள்ளைத்தோலின் மகத்துவம் கூறும் கனேடிய வரலாறும், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவம் தருவதும் தவிர இவர்களின் முன்னேற்றம் எதிலுமில்லை.
என் அன்னையின் வாழ்வியல் 'மனோதத்துவம் அறியவில்லை. ஆதலால் அவளின் மகளாகிய நான் ''மனோவியாதி''யால் மாறிப்போன என் தோலைப்போல... பல்லைப்போல நாளுக்குநாள் மாறியபடிதான்.''

நான் பேச்சை மாற்ற எண்ணி ஏதோ நகைச்சுவையை (பெண் சம்மந்தப்பட்ட)
ஐனரஞ்சகமாய் முடிக்கவும் கனம் குறைய நீ சிரித்தாய், உன் அழகு விழிகளில் அத்தனைபிரகாசம் எங்கிருந்து வந்தது றேக்? இப்போ எங்கே போயிற்று?
வானத்தின் அழகிலே நான் மோகுறும் போதெல்லாம், பச்சையாய்க்கண்ட மரங்களைமொட்டையாய்க் கண்டு நான் கலங்கிடும் போதெல்லாம் உன் உதடு பிதுங்கி சின்னதாய் சிரிக்கும்.
''என்ன அழகு?!'' என நான் உன்னோடு பகிர்ந்துகொள்கையில் 'ஓ அழகுதான்'
என்று தலையசைத்துவிட்டு அதோடு அவ்விஸயம் முடிந்துவிட்டதாய் நீ நடப்பாய்.
நானோ ஆச்சரியப்பட்டுக் கொண்டோ சிலாகித்துக்கொண்டோ வருவேன். என்னை பார்த்து நீ சிரித்துக் கொள்வாய்.
நான் ''இதென்ன சிரிப்பு.. உலகத்தில் என்ன என்பதாய் அலட்சிய சிரிப்பு'''
உன்னை கோபித்துள்ளேன்-கடிந்துள்ளேன், மனசுக்குள். இயற்கையோடு இணையும் என்மனசில் அத்தனை பிரியமெனக்கு.
புரிகிறது. வறுமையில் வாடும் மானிடக்கரங்களுக்கு சிவப்புக்கரங்கள் இரத்தம்
கொடுப்பதும், மனிதக்கரங்கள் பிராணிகள் இறப்பில் சோகித்துப்போவதுமாய் மானுடம் அழிகையில் மிருகங்கள் வளர்ப்பை இரசிக்கும் என்னைப் பார்க்கையில் உனக்கு சிரிப்போ...?
''உன்னைப்பார்க்க எனக்கு பொறாமையாயாய்க்கூட இருக்கிறது'' நீ அன்று
சொன்னாய். நான் நளினமாய் உன்னை வெட்டிக் கேட்பேன் ''ஏனோ??".
நீ காத்திருந்தாற்போல் சொல்வாய்.
''வண்ணத்துப்பூச்சியின் சிறகைப் பிய்க்கும் குழந்தைப்பருவம் குறித்து எனக்கு
விமர்சனம் உண்டு. நான் வண்ணத்துப் பூச்சியாய் பறந்த வயதில் என்னைப் பிய்த்த மானுடர் மீதென் வெறுப்பின் வீரியம் என்னென்று சொல்வேன் சியாமி.....
அம்மா.... அவளை இறுக்கிய கயிறுகள் ஞாபகம் இருக்கு. மண்ணிறமாய்
திரண்ட கயிறு. பாவம் அவள் தலை கலைந்து கதறும் போதுகளில் என்னைப்பற்றி சிந்திக்க ஆளில்லை. அப்பாவின் அம்மாவின் அழுகல் பேச்சுக்கள் 'உன் அம்மாவின் ஆக்கள்' என விளித்துக் கொல்லும்.
எனக்குள் எழுகின்ற அக்கினி அணைக்க, அணைக்க, அணைவதாய் இல்லை. என்னைப் பிய்த்தவர் பலபேர் உளர். எனக்கு மட்டுமே புரிந்த வலிகள். மாத்திரைகள் போட்டால்த்தான் உறக்கம் எனக்கு. உற்சாகமாய் இருக்கிறார்கள் வண்ணத்திக் கொலைஞர்கள்'' சொல்லிக்கொண்டே நீ போக நான் சோகித்த பொழுதாய் அதுவும் ஆயிற்று.
இன்னும் நெஞ்சுக்குள் ஞாபகமிருக்கு. நீ நான் ஜெகன் சேர்ந்து நடந்த பாதைகளில் இன்று இராணுவத்தடங்கள். ஆனால் அதற்கு முன்னமே மண் உனக்கு
அந்நியமானது தீடீரென ஒருநாள் ''எப்பிடி இருக்கிறிங்க'' என ஐரோப்பாவில் இருந்து ஒலித்த ஜெகனின் குரல்போல.
அது எல்லாம் போய்விட்டது தோழி போயேயய விட்டது. இப்போ நானும்
நீயும்தான் எச்சம். ஏதாவது செய்யவேண்டும் என்ற உந்துதல் போய் ஏதோ வாழ்கிறோம்.
உனக்குள் ஒரு உலகம் உன் உறக்கம் தவிர்த்து/தவிர்க்க விழித்தபடி. எனக்குள் இன்னொன்று.

என் அம்மம்மா. சொல்லப் போனால் என் அம்மம்மாவால்த்தானே நீ எனக்கு
நண்பியானாய். உன் வீட்டின் விஷயங்களை அள்ளிக்கொணர்ந்தால் சீனி மிட்டாய் வேண்ட இரண்டு பத்து சதம் (என்ன கணக்கோ) தருவதாக சொல்லி அவ காட்டின வெத்திலை பையுள் என்னை ஈர்த்த சில வெள்ளி நாணயங்கள்தானே அவள் அடித்த பந்தாய் நான் உன் வீட்டில் நுழைய ஏதுவானவை.
''றேகாவ பள்டத்துக்கு என்னோட விடுறிங்களா" எண்டபடி நான் பூனைபோல
உன் வீட்டில் நுழைந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான்.
அம்மம்மா... அவள் தந்த பிம்பங்கள்.
நீயும் நானும் துள்ளியோடிய நாட்களுக்கு முட்டுக்கட்டையாய் எம் வாழ்வில் விதி என்னை மூலையில் இருத்தி சந்தோஷமாய் விளையாடியது.
அதற்குப் பிறகுதான் அம்மம்மாவின் ஆட்டம் (தள்ளாட்டம், வாயாட்டம், இத்யாதி)கூடி அவள் புறுபுறுக்கத் தொடங்கினாள். அவளை யார் கவனிப்பது?
இப்போ அதையெல்லாம் எண்ணி சிரிப்பு சிரிப்பாய்ச் சிரிப்போம். எங்களை அந்த
மனுஷி(?) எவ்வளவு கவனமாய் கையாண்டிருக்கிறாள் எண்ணும்போதெல்லாம் நான் 'மெய்' சிலிர்ந்து போவேன்.
அம்மம்மா நாங்கள் சைக்கிளில் மிக வேகமாய் ஏறும்போதும் ''பிள்ள...'' எனக்
கூப்பிட்டு ஏதோ சொல்ல தயங்குவாள். நாங்கள் அவளை கவனிக்காமல் செல்லும்போது அவளின் புறுபுறுத்தலை தாண்டி வீதிக்கு வந்திருப்போம்.
''எல்லாம்'' புரிபடும் வயதில் அவள்பால் பரிதாபமான அன்புதான் எமக்கு வந்து
இருந்தது.
அவள் போய்விட்டாள்.
ஓ றேக்ஸ்... நீதானே சொன்னாய் கூடப்படித்த அந்த பதினெட்டே வயது
நிரம்ப இருந்த அந்த கிரேக்கப் பெண் நிரம்பிய பின் காத்திருந்தாற்போல் தனக்குள் ஒரு உயிரை நிரப்பியபடி அடுத்த வருடம் எம் முன் ஒரு மோல்இல், வண்டிலுள்
குழந்தையொன்றைத் தள்ளியபடி, வயிற்றிலும் ஒன்றைத்தாங்கியபடி.
அவள்தான் ஒருமுறை எத்தனை அழகாகச் சொன்னாள் எம் பாடசாலை
இடைவேளை நேரம். எவ்வித சங்கடமோ சங்கோஜமோ இல்லாமல், தங்கள் கிராமத்தில் முதல் கலவியின் பின் வரும் பெண் இரத்தத் துணியை வீட்டு வேலியில் இட்டு, 'அட இவள் என் வீட்டுப்பெண் கற்புள்ளவள்' என அதன் மூலமாய் பிறர்க்கு அறிவிக்கும்வழக்கம் என. நீ சிரித்தபடியே சொன்னாயே 'அட அங்கும் அதேதததத தானா?''
நீ சொல்கையில் நானும் அவளும் எப்படி சிரித்தோம்.
ஸ்ராறா உனது தலையில் செல்லமாக குட்டினாள். நீ குறும்பாம்.
ஆப்பிரிக்ககண்டத்தில் வாய்க்குள் நுழையாத பகுதியிலிருந்து வந்த கறுத்த பெண் லீஸாகண்ணடித்தாள். அவள் அவளது அப்பாவின் இரண்டாவது தாரத்தோடு வசிக்கிறாள். ஆசிரியையாக தனது ஊருக்குப்போய் தனது ஊரை மேம்படுத்த வேண்டும் என்று சொல்லி மற்ற நண்பிகளின் சிரிப்பைச் சந்தித்து நெஞ்சை நிமிர்த்திக்கொள்வாள்.
அம்மம்மாவின் அழிவு சகாப்தத்தின் அழிவல்ல என்றே தோன்றுகின்றது.
ஆனாலும் என் பிரிய றே! உனக்கு நான் சொல்கிறேன். நம்பிக்கைகளுள்
நடப்பவையும் உண்டு நம் சந்திப்பைப்போல!
அந்த வன்னித் தெருக்களில் நாம் நடந்து திரிந்தது போல் இந்தக் கனேடிய
வீதிகளில் என்றேனும் நடப்போமென கனவேனும் கண்டிருப்போமா சொல்?
இன்று நீ நடைபிணமாய்... நம்பிக்கை தொலைத்து, போர் தந்த விரக்தி, உன்
சிறுமிப் பிராயத்துக் குடும்பச் சூழல் நசிவு என உன்னை துரத்துகையில் இங்கும் நீ
இறுக்கப்படுகிறாய். பலாத்காரமாய் 'நீ' மறுதலிக்கப்படுகிறாய்.
''இவர்கள் மனிதர்கள் இப்படித்தான் வாழ்வார்கள். நாமும் இதற்குள்தான்
வாழ்ந்தாகவேண்டும் நீ விரும்பினாலும் விரும்பாமற் போனாலும்'' என் யதார்த்தவாதம் எனக்கே ஏற்புடையதாய் இல்லாவிட்டாலும் நான் ஏற்றுக்கொண்டதாய் பாவனைப் படுத்தியபடியே சொல்லுவேன். நீ கைகளை கைவிட்டபடியே ஒரு பெருமூச்சுடன் சோர்வாய்.
அந்த கிழவரின் விழிச் சிவப்பும், பின் வாங்கலும் அடிக்கடி எனக்குள் துப்ப
வைக்கிறது. எம் பிராயத்து நண்பன் ஒருவன், ''என்ர லவ்வர் அ போலதான் மாமியும் நல்ல ஷேப்" என விபரித்தபோது ஏற்பட்ட உணர்வு ஒழுக்க ரீதியானதா என்றெல்லாம் நாங்கள் விவாதிப்போம்.
அப்போதெல்லாம் பைப்பை திறந்ததும் வீழும் நீராய் உனக்கு பக்கத்து சீற்
பையனை எட்டோ ஒன்பதோ வயதில் நீ பென்சிலால் குத்தியது ஞாபகம் வரும்.
சாராம்சங்கள் எதற்கு?

இறுதி இரவு. நீ நான் - உன் சில உண்மைகள்.
''இப்பொழுதெல்லாம் அம்மா பெரிதாக சிரித்தால் அழுதால் எனக்கு பயம் கௌவிக் கொள்கிறது. இவளை யாரும் கட்டி வைத்துவிடுவார்களோ என்று அச்சமாயிருக்கிறது.இவளைக் காவல் காக்க பிறந்தது போல் அவள் தூங்கிய போதும் தூங்காமல் உழலும் நான். இவளை முன்னிறுத்தியே என் சந்தோசங்கள் இருப்பதாய் அவள் சிரித்தால் சிரித்து, அழுதால் அழும் என் மனசு. அம்மா என்ற அவளை எவ்வளவு மட்டமா இவர்கள் சிதைத்தார்கள். இந்த உலகை பார்க்கத் தொடங்கியபோது பலவந்தமாய் என்னையும் சிதைத்தபோது, உலகை மிகக் கொடூரமாய் புரிந்து கொண்டேன். என் வயதில் யாருக்கும் கிடைக்காமல் போன அநுபவம் அந்த வயதுக்கு மீறி என்னில் விழுந்தது. அதை இறக்கி வைக்க முடியாமல் பாரமாய் இருக்கிறது. எல்லாப் பிள்ளைகளையும்போல யாருடனும் அவ்வளவாய் ஒட்டிக்கொள்ள மாட்டேன். அம்மாவைப்பற்றி கேட்டு விடுவார்களோ என்ற பயம் மௌனமாய் ஒரு மூலையில்
என்னைக் கதறடிக்கும்.''
''உன்னோடு பழகத்தொடங்கியது என் சிறிய தங்கை இறந்து பிறந்த சோகத்தின்
பின்புதான்...'' தொடர்ந்து சொல்கிறாய்.
உனக்கு ஒவ்வாத உறவினர்கள் பற்றியும் கனத்துக்கொண்டாய்.
''நான் பாடசாலை போகாத நாட்களை தங்கள் குடும்ப விஷயம்போல் என்னிடம்
விசாரிக்கும் இவர்களுக்கு மனசு பற்றி அக்கு வேறாக்கினாலும் புரியாது. காரணம் அறியாமல், ''இனியாவது ஒழுங்காய் படி'' எனும்போது எனக்குள் அத்துமீறி இவர்கள் பிரவேசம் இடிக்கிறது.
அப்பா அதை அக்கறை என்கிறார். ''இயல்பாய் சொல்வதை ஏன் பெரிது படுத்திறாய் பிள்ளை" என்கிறார். என் இயல்பு கெட்டுப் போவதைப்பற்றி புரிந்துகொள்ளாமல்.... என் தனிப்பட்ட விஷயம் என்கிறேன்.
''பள்டம் போகாதது தனிப்பட்ட விஷயமா? குடும்ப விஷயமல்லா'' என்கிறார்.
அவரை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர் குடும்பத்தை என்னில் திணிப்பதில் எவ்வித நியாயமும் இல்லை என்பது அவருக்கு புரியுதேயில்லை. உறவுகளோடு ஒத்துப்போ என்பது அவர் குணாதிசயம் என்றால் மனிதர்களோடு மட்டுமே சிரிப்பதென்ற என் குணத்தையும் அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்''
நீ வருத்தத்தோடு சொல்கிறாய்.
எமது சுயத்தின் திருப்திக்காக மட்டுமல்ல உறவு நெருக்கடிகளிலிருந்து விடுபடக்கூட சம்பாத்யம், கல்வி, அந்தஸ்து தனியிடம் என்பது எமக்கு நன்றாகவே மிக நன்றாகவே தெரியும். ஆதலால்த்தான் படிக்கிறோம். எங்கள் சுயத்தை இடிக்காத எந்த வேலையோ நாங்கள் தேடிக்கொள்வோம்.
இனியாவது ஒழுங்கா.... வார்த்தைகள் உனக்குத் தேவையில்லை. நோய்வந்தது. அது ஆறும்போது நாங்கள் மீண்டும் அந்த நோயிற்கு பாதகமாயின்றி அதை எதிர்க்க துணிவோம்.
நான் மௌனமாக சொல்கிறேன்.
நானும் நீயும் வாழ்வதற்கு ஏற்புடைய போதில் உன்னை நானும் என்னை நீயும்
புரிந்துகொள்ளும் சமயம் வருமெனில்... ம்... எனக்குள்ளும் சிறு மூச்சு.
இந்த பாடசாலை ஆரம்ப மாதத்தில் நீ பாடசாலைக்கு ஒரு வருட இடை-வேளைக்குப்பின் செல்லப்போகிறாய். மன உளைச்சலிலிருந்து மீண்டவாறே 'மீண்டும்' இணையப் போகிறாய்.
புதுப்பாடசாலையில் ஒவ்வொருநாளைக்கு ஒவ்வொரு உடை அணியமறக்காது
போனில் நினைவு படுத்துமாறு சிறு பிள்ளை போல வேண்டிக்கொண்டாய். அப்பத்தான் வேறு இனப் பிள்ளைகள் மதிக்குங்கள் என்று ஜோக் விட்டாய். ஆடை பற்றிய பிரக்ஞையற்று சும்மா உடலுக்கு வசதியானவற்றை நீ அணிவது என்னோடு நீ படித்த ஒரு வருடம் வரையான உன் இயல்பு.
"இவர்களுக்காக நாம் இன்னும் என்னத்தையெல்லாம் மாற்றியாவேண்டும்'' எனக்குள் எழுந்த கேள்வியை மறைத்தேன்.
''ஆண் நண்பர்கள் பிடிக்கோணும்'' என்றெல்லாம் தொடர்ந்தாய். நீயும்
இயல்பாயிருக்க எத்தனிக்கிறாய். அது எங்கே கைகூடாமல் போய்விடுமோ பயப்படுகிறேன்.
நான் அறிவேன். உன் வயது மாணவனை அதுவும் அழகாய்க் காண்கையில்
கண் விரிக்கும் வயதுப் பரவசங்கள் உன்னிடம் கிஞ்சித்தும் இல்லை. உன்னை
தொடரும் பையன்களில் நீ காட்டும் கோபம் மீண்டும் அவர்கள் உன்னை
சீண்டுவதற்கான ஒத்திகை அல்ல.
ஆனாலும் தோழி உன்னால் ஒரு ''ஆண்'' நண்பனை பிடிப்பதோ அவனுக்காக
உருகுவதோ முடியாத ஒன்று (அதை தவறென்று நான் எண்ணவில்லை!).
நீயும் இயல்பாக வேண்டும் என்பதுதான் என் விருப்பமும்.
அது எனது பிரியமான பெண் ஒருவர் சொன்னதுபோல 'கவுன்சிலிங்'
போவதால் மாத்திரமோ, உலகத்தில் இன்னும் எத்தனையோ துன்பங்கள் இருக்கு என்று எண்ணுவதால் மாத்திரமோ நிகழாது.
தடித்த புத்தகங்கள் அவர்கள் படித்தவை. எம் சம்மந்தப்பட்டவையையும் அவை
இணைத்துக்கொள்ளுமாயென்ன?
தமிழ் நடுத்தர வயது ஒருவர் தனது 3 வயது மகனுடன் தற்கொலை செய்தபின் சில கிழமைகளில் 'சூட்டோடு சூடாக' கனேடிய தமிழ் வானொலி 'ஒன்றில்' தற்கொலை செய்வது சரியா பிழையா என்று 'கலந்து' உரையாடினார்கள்.
நீ மாற 'எல்லாமுந்தான்' மாற வேண்டும். சாத்தியமா?
''புதிதாய் பிறந்ததுபோல இருக்கிறது'' என்கிறாய். அப்படியே ஆகட்டும். அது
போதும்.
இதோ என் அருகில் படுத்துக்கிடக்கிறாள் என் பிரிய சகி. கால்கள் மடக்கி
குறண்டி, ஒரு கரடு முரடான குழந்தைபோல.
உனக்காக மீண்டும் மீண்டும் மானசீகமாய் மனசு 'ஒரு' கடவுளை
வேண்டிக்கொண்டது.


நீண்ட வருடங்களின் பின்னான சந்திப்பு எவ்வித நீரோட்டமுமின்றி கலைந்தபோது, நான், ''இந்த சமர் இதத்துக்கு நன்றி'' யென உன் குடும்பத்தினருக்கு சம்பிரதாய வார்த்தைகள் கூறி கிளம்புகிறேன்.
நீயும் என்னோடு கிளம்புகையில் உனது ஆடை வழமைபோலவே உனக்கு
எடுப்பாய் இருப்பதாய் நான் தெரிவித்துக்கொள்கிறேன். நீ உனக்கு மட்டும் என்னவாம் எனவும், நான் உண்மையாவா? என உன் பொய்யை சந்தேகப்படுகிறேன் வழமைபோலவே!
நாம் பழசை மறக்கவில்லை என இருவரும் எம்மையிட்டு பெருமிதம்
கொள்கிறோம். பேசிக்கொண்டுபோகையில் எங்களைத் தாண்டும் கார்கள் சில 'ஹார்ன்' பண்ணி மகிழ்ச்சி(?) தெரிவிக்கின்றன. அது எங்களை நினைவுக்கு அடிக்கடி திருப்புகிறது.
பிடிக்காத ஒரு விடயத்தை பற்றியதாய் நம் பேச்சு ஏன் அமையவேண்டும் என
நாமிருவருமே அதை அசட்டை செய்கிறோம்.
நீ இங்கு மனிதர்கள் பார்வை என அலுப்புற்று கொண்டாய். இவர்கள் தரும்
அழுத்தம் அனைத்திலும் அதிகமென ஒரு வெள்ளை மனிதனைக் காட்டுகிறாய். ஒரு முறை நீ பஸ்ஸில் ஏறும்போது உன் இடுப்புக்கு கீழே தட்டிய வெள்ளை ஆணை நீ நினைவு கூர்ந்தாய்.
எங்கள் முன்னால் பஸ் நிற்கிறது. மிகவும் உற்சாகமாக ஏற முற்பட்ட அந்த
வெள்ளைச் சிறுவன் தாயின் கண்டிப்பான, 'லேடிஸ்ட் பெர்ஸ்ட்' (பெண்களுக்கு முதலிடம்) இல் முகம் சுருங்க முதற்படியில் வைத்த காலை பின்னிழுத்து ஒதுங்குகிறான்.
துடுக்குற்று நின்ற அவன் முகம் எமக்குள்ளும் எதிரொலிக்கிறது.
உன்னை நான் மீண்டும் பிரிந்தபோதும் வானம் அழகாய்த்தான் இருக்கிறது.
அதற்கு எல்லாக்கதையும் தன்னில்தான் முடிவதென்ற வரட்டுப் பெருமை.
அதற்கு எப்போதும்போல அதை தருவதில் எனக்கு ஆட்சேபணை இல்லையென்றாலும், உத்தேசம் இல்லை.
இன்னும் கொஞ்சக் கதை பாக்கியிருக்கிறது. அதில் 'நீ' நிம்மதி பெறுவதே
முடிவாய் இருக்கும்.
~




உயிர்நிழல் (பிரான்ஸ்) 1999

Saturday, April 02, 2005

Part of an Incomplete fiction

நடந்து திரிந்துவிட்டு, வந்து கேட்டாயானால்
என்னிடம் பதிலில்லை. எனது தீர்வுகள் நிரந்தரமானவையா,நிச்சயமானவையா எனக்குத் தெரியவில்லை. நீண்ட பாம்பொன்று தன் எல்லைகளை அடைந்து மீளவும் ஆதியில் இருந்து ஆரம்பிக்கும் அந்த சப்வே யில் எனது எல்லைகள் முடிவடைந்திருந்தன. ஆறுதலான வார்த்தைகளோ, அதற்கான வழிகளோ அற்று அடைத்திருந்த காலத்தில் அதன் முடிவிலி வரை சென்று திரும்பி தொடர்ந்து ரெயில் மாறி ரெயில் ஏறி, எனது தனிமையை, துயரத்தை, கோபத்தைத் தீர்க்கும் அக் காலத்தில், பெண்களின் முழு இரத்தமும் முழு எலும்பும் இரத்தமும், தலைமுடியும் சதையும் இதற்கு பிரத்தியேகமான பிடித்தங்களாயிருந்தன. இப்போதும் வேலை விட்டு வீடு (என்னுடைய மூட் டின்போது துப்பரவாக்கும், சமைக்கும், படம் பார்க்கும், ஆண் நண்பனைக் கூப்பிடும்), வீடு விட்டு வேலை என இந்தப் பாம்புடன் நான் என் வாழ்வின் கூடு திரும்புதல்களை எதிர்கொள்ளலாயினேன். வாழ்தலை எதிர்கொள்ளல் போல; நெடும் பிரச்சினைகளின் முடிவுகளை கண்டடைதல் போல; இவ்வளவு சுத்தி வளைக்காமற் சொன்னால் பிரச்சினைகளிலிருந்து தற்காலிகமாகத் தப்ப தேர்ந்தெடுத்த வழி.
எனக்கு ஞாபகம் வருகிறது, தூங்கி விழும் அதிகமான நேரம் தவிர்த்து, அபூர்வமாய் சில வேளை அவன், அப்புறமாய் தவிர்க்கவே முடியாத ஒருவனாய் நீ. பூச்சற்ற, எனக்கு 'வெறிச்'சென பயம் சொல்லித் தந்த என் கூட்டுச் சுவர்கள். அவற்றில் காதுகளுடன் அவர்கள். என்னிடம் இனி எப்போதும் இல்லை என் முறிவுகளுக்கான விசனங்கள். காதலுக்கான நீண்ட நெடும் காத்திருத்தல்கள். அவனது, அவன்களது பொய்கள், அல்லது பொய்களிலும் கோரமான இந்தப் பொய்களின் மௌனங்கள்.
உன் நேர்மையற்ற அரசியலை அடையாளங் காணும்வரை, உன்மீது பிரமிப்புற்ற தாயாய் அன்பு செலுத்தினேன். என்னுள் நீ செலுத்திய அனைத்து தவறுகளையும் பொறுத்தேன். என் செயல்களைப்போல, எனது காதல் உண்மையாய் இருந்தது (அது எப்படிப் பொய்யாக இருக்கும் ?). அத்துடன், எனது காதல் என்னுடையதாய் மாத்திரம் இருந்தது.
ஆகாயம் நிரம்பி வழிகிறது பொய்களால்.
நீள் பாம்பு; என் துயரங்களின் போது, நான் வந்து நிற்கும் ஆபத்தான குகை; வாள் ரம்பமாய் அறுக்க அதன் கனத்த அகோர சூழ்ச்சியில் எத்தனை தடவை விழுந்திருப்பேன்.
காலம்காலமாய் எங்களின் புலம்பலில் எழுந்த தாய்மை, நீயும் நானும் கலந்து திரிந்த, நான் விலகி நடந்த, ஒரு எப்பம் நாளிகைகளின் எச்சமாய். குழந்தையை நீ பிணைப்புடன் தடவிக் கொண்டிருந்தபோதே, "எதை காரணமாய் வைத்தும்" யாரும் யாரையும் இழுத்து வைத்திருப்பதில்லை என உன் பழைய உடன்படிக்கை பகர்ந்து விடைபெற்றேன். ஒப்பந்தங்களுக்குள் புகுந்தொழிந்த உறவு. காதல் காமம் கலவி, "நீண்ட நாட்களாகி விட்டன, வாவன் இந்த பாம்பில் சந்திப்போம்" என சாதாரணமாய் பழசைத் தட்டிப் பேசத்தெரிந்த, பொய்களைச் சொல்லாத, உண்மையை நெருங்காத உன்னிடமிருந்து. எத்தகைய தத்துவங்களை பேசினாலும் அதிகாரம் உங்களிடம் இருக்கிறது. உன்னைப் பற்றிச் சொன்ன எல்லா ஆண்களும் உன்னைப் போல்தான் இருக்கிறார்கள். எனக்குப் புரிந்ததென்னவென்றால், *ஆண்களாய் இருப்பது அவர்களுக்கு வசதியாயிருக்கிறது. அதையிட்டு, நான் என்னை வருத்திக் கொள்ள முடியாது. உனக்காக என்னை குறைப்பிக்க முடியாது. என்னால் "அப்படி ஒருவனால் எப்படி இருக்க முடியும்" என உனது பழைய பெண்கள் போல நினைத்துவிட்டு உன்னை நம்பியபடி என் ஆன்மாவை கிழிக்கமுடியாது.


என்றுமில்லாத பரவசத்துடன் மாடியிலிருந்து கீழே பார்த்தேன். அந்த மரத்தின் மீது தெருவிளக்கு வெளிச்சம். இந்த நெருக்கடி மிகுந்த நகரத்திலும் குப்பையெனத் தள்ளப்பட்டிருக்கிற அந்த அழகை நான் தீடீரென வாங்கினேன். இன்னும் கொஞ்ச நேரம் நிக்கலாம்- வேலைக்கு வெளிக்கிடுவதற்கு முன்னம். திடீரென ஓர் பாம்பு கண்ணைக் கொத்துகிறது. கண்ணீர். சதா என்னை அறுத்துக் கொண்டிருக்கும் உன் பார்வை வெட்டு. அந்த யன்னல் வழி அழகெல்லாம் திசை தவற, நான் குமுறிக் குமுறி அழுதேன். உன்னிடம் நான் திரும்பி வர முடியாது. உனது தவறுகளை தாங்கிக் கொண்டு, உன் காதலை சந்தேகித்து, கலவியில் இணையமுடியாது நிரந்தமின்மை கலக்க, "இதுக்குத்தானோ" என என்னை அலங்கரித்து, எனக்குள் உன்னை தக்க வைத்துக் கொள்ள என்னைக் கேவலப் படுத்தும் வித்தைகள் செய்து, தொடர்ந்து என் ஆன்மாவை ரணப்படுத்திக் கிழித்துக் கொண்டிருக்க முடியாது. நான் கல்நெஞ்சக் காரி என்று சொன்னாய். இருக்கலாம். நேசத்தை, காமத்தை, காதலை ஒலிப்பிக்கும் ஆண் தந்திரமயமான இந்த கீதங்களிலிருந்து நான் உன்னிடம் ஓடோடி வாராதிருப்பதே பெரும் சவால்தான். ஆனால் நான் உன்னோடு சவாலிடவில்லை. தன் பையனிடம் தந்தைபோல தாய் போட்டி போடுவதில்லை (எனக்குள்ளிருக்கும் தாய்). உனக்கு அத்தகையதொரு பிம்பம் எக்காலத்திலும் தேவையும் இல்லை.

நான் மெதுவாக பின் வேகமாகி இயங்க ஆரம்பித்தேன்.
ஓ! எனது தனிமை, எப்போதும் நிரந்தரமானது. உன்னோடு இருந்தபோதும் அறுத்தது. இப்போது அது என்னை அப்போதாய் விரட்டாதிருப்பதே ஆறுதலாயிருக்கிறது. பாம்பு ஊரும்; பிறகு, திரும்பவும் ஊரும்; சலிக்காமல், மறுபடி மறுபடி ஊரும். அது என்னை ஏப்பம் விடவில்லை. அது நீண்டு விரிக்க, நீண்டு தெரியும் (என்) எல்லை.
~

(2001)
('சந்திப்பு: ஜனனி' புனைவின் தொடர்ச்சி. அவ் முடிக்கப்படாத புனைவிலிருந்து ஒரு கதை)

*அழுத்தப்பட்டவை 'சந்திப்பு:ஜனனி' பிரதியில் வந்த வரிகள்.